ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
சொந்த மைதானத்தில் இன்று விளையாட உள்ளதால் அந்த அணி வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த அணி கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு மோசமான நிலையில் உள்ளது. எனவே, இன்றைய ஆட்டத்தில் அந்த அணி குஜராத்தை வீழ்த்த வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 206 ரன்கள் இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான், 194 ரன்கள் குவித்து நெருங்கி வந்து தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தனர்.
அவர்களிடமிருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் இன்றைய ஆட்டத்தில் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் வைபவ் சூர்யவன்ஷி, சிம்ரன் ஹெட்மயர், ஷுபம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடினால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வசமாகலாம். பந்துவீச்சில் அந்த அணி ஜோப்ரா ஆர்ச்சர், பசலஹக் பரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, வனிந்து ஹசரங்கா என வலுவாகவே உள்ளது. இவர்கள் இணைந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் அது குஜராத் அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடியை அளிக்கக்கூடும்.
மறுமுனையில் குஜராத் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது உள்ளது. கடைசியாக நடைபெற்ற டெல்லி, கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டங்களில் குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் அரை சதம் விளாசினர். குறிப்பாக ஷுப்மன் கில், 55 பந்துகளில் 90 ரன்களைக் குவித்து எதிரணியை மிரட்டினார்.
இறுதி நேரத்தில் ஜாஸ் பட்லர், ஷாருக் கான் ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றி தேடித் தந்தனர். சாய் சுதர்ஷன் இந்த சீசனில் 8 ஆட்டங்களில் விளையாடி 417 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3-ம் இடத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர், ஷாருக் கான், ஷெர்பான் ருதர்போர்ட் ஆகியோரிடமிருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும்.
அதேபோல் பந்துவீச்சிலும் குஜராத் அணி அற்புதமான பவுலிங் வரிசையைக் கொண்டுள்ளது. முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோர் கொல்கத்தா அணிக்கெதிராக சிறப்பாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்தனர்.
இந்த பவுலிங் வரிசை, ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆட்டத்தில் ரஷித் கான் 4 ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றி ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். எனவே, அவரது பந்துவீச்சும் இந்த ஆட்டத்தில் முக்கியத்துவம் பெறும்.