கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான 3 நிதியாண்டுகளில், ரூ.968.11 கோடி மதிப்பிலான மிகைச் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையில் நேற்று 2019- 20, 20-21 மற்றும் 21-22-ம் ஆண்டுகளில் மிகைச் செலவுகளுக்கான மானியக் கோரிக்கைகைளை, அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பேசியதாவது: கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளி்ன் நிதியொதுக்க கணக்குகளை பொதுக்கணக்குக் குழு ஆய்வு செய்ததில், சில மானியங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட நிதியொதுக்கத்துக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மிகை செலவுக்கான காரணங்களை ஆய்வு செய்தபின், இந்த ஆண்டுகளில் ஒவ்வொரு மானியத்தின் கீழும் அனுமதிக்கப்பட்ட நிதியொதுக்கத்துக்கும் மிகையாக செய்யப்பட்ட செலவுகளுக்கு ஒப்புதல்பெற, சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் வைக்கப்படலாம் என பொதுகணக்குக் குழு பரிந்துரைத்துள்ளது.
அவ்வாறு 2019-20-ம் ஆண்டில் ரூ.942 கோடி மிகைச்செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவையில் வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் பெருமளவு மிகைச்செலவு பள்ளிக்கல்வி, பாசனம், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய மானியங்களின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2019-20-ல் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சரண் விடுப்பு காசாக்குதல் அதிகரித்ததாலும் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணத்தொகை, அகவிலைப்படி ஆகியவை உயர்த்தப்பட்டதாலும் பள்ளிக்கல்வித் துறை மானியத்தின்கீழ் மிகைச்செலவு ஏற்பட்டுள்ளது.
பணியாளரமைப்பு இயந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கான கூடுதல் சதவீத செலவுகள் மற்றும் பல்வேறு திட்டங்கள், திட்டப்பணிகள், பெருந்திட்டங்கள் மீதான வட்டிக் கட்டணங்களால் பாசனத்துறை மானியத்தின்கீழ் மிகைச்செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 5 புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதாலும், ஊதிய செலுத்துகை அதிகரித்ததாலும் உணவுத்துறை மானியத்தில் மிகைச்செலவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.20.87 கோடி மிகைச்செலவுகள் மேற்கொள்ளப்பட்டதற்கான மானியக் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மிகைச்செலவு தொழில்துறை மானியத்தின்கீழ் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பத்தூர், ஆம்பூர் மற்றும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு பணியாளர்களின் சம்பள நிலுவைத்தொகை, மின்கட்டணம் மற்றும் கடனை செலுத்துவதற்கான வழிவகை முன்பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் மிகைச்செலவு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் 2021-22ம் ஆண்டில் ரூ.5.24கோடி மிகைச்செலவு மேற்கொள்ளப்பட்டதற்கான மானியக் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. அதன்படி, 2021-22-ம் ஆண்டில் பெருமளவு மிகைச்செலவு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மனித வள மேலாண்மைத்துறை ஆகிய மானியங்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த நிதியாண்டில், கோவளம் வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு நிலையான நகர்ப்புற கட்டமைப்பை மேம்படுத்த நேரடி செலுத்துகையை, புத்தக சரிகட்டுதல் செய்ததன் காரணமாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியத்தின்மீது மிகைச்செலவு ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கூடுதல் கொள்ளளவை உருவாக்கியதால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மானியத்தின்கீழ் மிகைச்செலவு ஏற்பட்டுள்ளது. எனவே, 2019-20, 2020-21, 2021-22ம் ஆண்டின் மிகைச்செலவுக்கான மானியக் கோரிக்கைகளுக்கு பேரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப்பின், கூடுதல் நிதியொதுக்கம் தொடர்பான மானிய கோரிக்கைகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.