நாகர்கோவில்: கோதையாற்றில், பேராசிரியையிடம் அத்துமீறியவர்கள் மீது, ஐகோர்ட் உத்தரவில் வழக்கு பதியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், சில மாதங்களுக்கு முன், பெற்றோர், 5 வயது மகனுடன் திற்பரப்பு அருவி அருகே, கோதையாற்றில் படகு சவாரி செய்தார்.
அப்போது, மற்றொரு படகில் வந்தவர்கள், பேராசிரியை படகை வழிமறித்து, அவர்கள் மீது தண்ணீர் தெளித்து, ஆபாசமாக பேசி உள்ளனர். இதுகுறித்து, கடையாலுமூடு போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அவர் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், பேராசிரியை புகாரில் வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்படி, திற்பரப்பை சேர்ந்த பிரபு, 36, டார்வின் பிரைட், 37, ராபின், 35, ஆகிய மூவர் மீது, கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிந்தனர்.















