கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இரணியல் பகுதி பெண்களின் புகைப்படங்களை, அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அனுமதியின்றி எடுத்து, அவற்றை ஏஐ மூலம் ஆபாசமாக மார்பிங் செய்து, போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பதிவேற்றம் செய்து, அப்பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய எஸ்.பி. உத்தரவிட்டார்.
சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பார்வதி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் தலைமையிலான போலீஸார் இது குறித்து விசாரித்ததில், குற்றச் செயலில் ஈடுபட்டது கக்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் மகன் தனுஷ் (22) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.













