கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மருதங்கோடு, கோட்டன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெனில் (30), தொழிலாளி. இவர் 2019ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரைய்யா, ஜெனிலுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோரின் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் பாராட்டினார்.














