காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நேற்று ஆந்திர மாநிலம், மங்களகிரியில் உள்ள ஓர் அரங்கில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்து கொண்டு பேசியதாவது: மதம் குறித்து எதுவும் பேசாத சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்றாலும், அந்த தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஊக்குவித்த பாகிஸ்தான் நாட்டுக்கும் இங்கு ஆதரவாக பேசுவது மிகவும் தவறு. ஆயினும் நாங்கள் அப்படித்தான் பேசுவோம் என்று கூறுபவர்கள் அந்த நாட்டுக்கே சென்றுவிடுங்கள்.
தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒரே மாதிரி நடந்து கொள்வது அவசியம். காஷ்மீர் நமது நாட்டின் ஓர் அங்கம். ஆனால், ஓட்டுக்காக அரசியல் நாடகம் ஆடக்கூடாது. பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த மதுசூதன் ராவின் குடும்பத்தாருக்கு ஜனசேனா கட்சி சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஜனசேனா கட்சி ஒரு சிறந்த நிர்வாகியை இழந்துள்ளது.
இறந்துபோன மதுசூதன்ராவ் யாருக்கு தீங்கிழைத்தார்? காஷ்மீரும் நமது நாட்டின் ஒரு பகுதி என்பதால் மதுசூதன் ராவின் மனைவி அங்கு சுற்றுலா செல்லலாமென வலியுறுத்தியதால் மதுசூதன் ராவின் குடும்பம் காஷ்மீர் சென்றது. அங்கு அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். இங்கு கூட இந்துக்கள் வெளியில் செல்லக்கூடாது என்றால் எப்படி? இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.