கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் 12 பேரை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று முன் தினம் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதனை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த 30 வயதான ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை சச்சின் (26) என்பவர் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த அந்த நபரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வென்லாக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மங்களூரு போலீஸார் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் 12 பேரை கைது செய்தனர். மங்களூரு காவல் ஆணையர் அனுபம் அகர்வால் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறுகையில், ” மங்களூரு சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அங்கு கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படவில்லை” என்றார்.