அமைச்சரவையில் விடுவிக்கப்பட்ட பொன்முடி, செந்தில்பாலாஜி இருவரும் 2-வது நாளாக பேரவைக்கு வரவில்லை. தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் அமைச்சரவையின் முதல் வரிசையில் இருந்த பொன்முடி பெயரும், 2-வது வரிசையில் இருந்த செந்தில்பாலாஜி பெயரும் நீக்கப்பட்டு, 3-வது வரிசைக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இருவரும் பேரவைக்கு வரவில்லை.
இந்த கூட்டத்தொடர் இறுதி நாளான நேற்று இருவரும் பேரவைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் இருவரும் பேரவைக்கு வரவில்லை.
அதேநேரம், அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜுக்கு 2-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் நேற்று பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.