வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

0
236

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

குறிப்பாக, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சிறு-குறு தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

அதுபோல, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்சார ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here