மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மேலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தி தீவைத்தனர் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ஷிர்சன்யா பண்டோபாத்யாயா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சுஜோய்பால் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் அங்கியுடன் ஆஜரான முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வாதாடினார். அவருடன் கட்சியின் மூத்த தலைவர்கள் சந்திரிமா பட்டாச்சார்யா, கல்யாண் பானர்ஜி ஆகியோர் உடனிருந்தனர்.















