தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் சி.கே.மோகன், பொதுச் செயலாளர் எஸ்.வாசுதேவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையில் 7 சதவீத வட்டி விகிதத்தில் கலைஞர் கடனுதவி திட்டம், படித்த இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தில் தளர்வு, தோல் பதப்படுத்தும் தொழில்களுக்கு மானிய அறிவிப்பு, தென்னை பொருட்கள் ஏற்றுமதிக்கு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிரத்யேகமாக குறுந்தொழில்களுக்கான புதிய தொழிற் பேட்டைகள் திருமுடிவாக்கத்திலும், கோத்தயம், சங்கரபேரிமற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் சிட்கோ அமைப்பதற்கான அறிவிப்பு, தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் தொழிற் கிடங்குஅமைக்கும் அறிவிப்பு, கும்மிடிப்பூண்டி, தூத்துக்குடி உடையார் பாளையம், திருச்சி, கூத்தநல்லூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ள சிப்காட்தொழிற்பேட்டையை மேம்படுத்துவது ஆகிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்புகளை டான்ஸ்டியா வரவேற்கிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.