தடுமாறும் சிஎஸ்கே: பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல் | IPL 2025

0
229

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சிஎஸ்கே அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்ட சிஎஸ்கே அணி சீசனை கவுரவமான இடத்துடன் நிறைவு செய்யய முயற்சிக்கக்கூடும். 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் வெற்றி பெற முடியாமல் தடுமாறி வருகிறது. இங்கு முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நிலையில் அதன் பின்னர் நடைபெற்ற 5 ஆட்டங்களிலும் தோல்விகளை சந்தித்
தது. ருதுராஜ் காயம் காரணமாக விலகிய நிலையில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியாமல் சிஎஸ்கே அணி தத்தளித்து வருகிறது.

பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முதல் 6 ஓவர்களிலேயே சிஎஸ்கே அணி ஆட்டத்தை கோட்டை விட்டுவருகிறது. பேட்டிங்கில் பவர்பிளேவில் பெரிய அளவிலான அதிரடி ஆட்டம் வெளிப்படுவது இல்லை. மாறாக விக்கெட்களை பறிகொடுக்கின்றனர். அதேவேளையில் பந்து வீச்சில் பவர்பிளேவில் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். எனினும் கடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் முன்னேற்றம் இருந்தது. டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ரன்களும் விளாசி கவனம் ஈர்த்திருந்தனர். இன்றைய ஆட்டத்தில் டெவால்ட் பிரேவிஸ் 3-வது வீரராக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆட்டத்தின் முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் சிஎஸ்கேஅணி கூடுதல் துணிச்சலுடன் விளையாடுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டிருந்தது. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில், 83 ரன்களையும் பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில், 69 ரன்களையும் விளாசியிருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் ஸ்ரேயஸ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். பின்வரிசையில் நேஹல் வதேரா தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் திறன் கொண்டவர். அவர், சிஎஸ்கே பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சன், சேவியர் பார்ட்லெட், யுவேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிகக்கூடும். இதில் யுவேந்திர சாஹல் கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு பார்முக்கு திரும்பி உள்ளார். ஹர்பிரீத் பிராரும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டவர். நடப்பு சீசனில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த 8-ம் தேதி முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து இருந்தது. இந்த ஆட்டத்தில் பிரியன்ஷ் ஆர்யா சதம் விளாசி மிரட்டியிருந்தார். அதேவேளையில் ஷசாங் சிங் அரை சதம் அடித்து பலம் சேர்த்திருந்தார். இவர்கள் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றக்கூடும்.

சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் கணிசமான வெற்றிகளை பெற வேண்டுமென்றால் மட்டை வீச்சு, பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here