‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி தியேட்டரில் ஸ்பெஷல் தருணமாக இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் மே 1 திரைக்கு வருகிறது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய சூர்யா, “படத்தில் ஒரு 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி இருக்கிறது. அதில் நாங்கள் நடனம் ஆடுவோம், சண்டை போடுவோம், விவாதம் செய்வோம். படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும் அதில் இருப்பார்கள். அது ஒரு எமோஷனலான காட்சி. அது படத்தின் தொடக்கத்திலேயே வரும். அது எனக்கு மிகவும் பிடித்த காட்சி. நம் அனைவருக்கும் தியேட்டரில் மிகவும் ஸ்பெஷலான தருணமாக அது இருக்கும்” என்று தெரிவித்தார்.