ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் புயலான வைபவ் சூர்யவன்ஷி நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 101 ரன்களை விளாசி மிரளச் செய்தார். அவரது புயல் வேக ஆட்டத்தால் 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பிஹார் மாநில தலைநகரான பாட்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமஸ்திபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் வலுவான மும்பை அணிக்கு எதிராக களமிறங்கினார்.
யு-19 இந்திய அணிக்காகவும் சூர்யவன்ஷி விளையாடி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா ஏ அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 4 நாட்கள் ஆட்டத்தில் சூர்யவன்ஷி 58 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது ராஜஸ்தான் அணி சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சமாக இருந்த நிலையில் ராஜஸ்தான் அணி நிதியை பொருட்படுத்தாமல் சூர்யவன்ஷியின் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்கியது. சஞ்சு சாம்சன் காயம் அடைந்ததால் சூர்யவன்ஷிக்கு ராஜஸ்தான் அணியின் லெவனில் வாய்ப்பு கிடைத்தது.
இளம்கன்று பயம் அறியாது என்பதை போல லக்னோ அணிக்கு எதிராக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டு மிரட்டினார். அந்த ஆட்டத்தில் 20 பந்துகளில் 34 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என மனம்வருந்திய அவர், அழுதபடியே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
ஆனால் தற்போது தனது 3-வது ஆட்டத்திலேயே அதிரடியாக சதம் விளாசி, உலக அரங்கையை அதிரச் செய்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. குஜராத் அணிக்குஎதிரான ஆட்டத்தில் நேற்று முன்தினம் அவர், 35 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக பட்டியலில் 2-வது வீரர்என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.
சூயர்வன்ஷி 11 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் விளாசினார். அவர், குவித்த 101 ரன்களில் 94 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் வாயிலாக கிடைக்கப்பெற்றதாகும். ஒவ்வொரு வீரரும் கிரிக்கெட்டில் சாதனை படைக்க வேண்டும் என கனவு காணும் வயதில் அதை சாத்தியப்படுத்தி பிரமிக்க வைத்துள்ளார் சூர்யவன்ஷி. அவரது டெக்னிக், பந்துவீச்சை அடித்து நொறுக்கும் விதம், மட்டையின் வேகம், பயமில்லாத அணுகுமுறை, முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசும் திறன் ஆகியவற்றுடன் அவரது மனநிலையும் தனித்து நிற்கிறது. இது அதிர்ஷ்டத்தால் வசமானது என்று கூறமுடியாது. 14 வயதில் அவர், தன் மீதும், தனது திறமை, திறன்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையால் சாத்தியமாகி உள்ளது.
இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்களை மிரள வைத்துள்ளார் சூர்யவன்ஷி. பெரும்பாலும் லெக் திசையை குறித்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டாலும் ஆஃப்-சைடிலும் சில நம்பமுடியாத ஷாட்களை விளையாடினார். இந்திய அணிக்கு எதிராக 100 டெஸ்ட் போட்டிகள், 80 ஒருநாள் போட்டி மற்றும் ஐபிஎல் தொடரில் 7 அணிகளுக்காக 116 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் கொண்ட இஷாந்த் சர்மாவுக்கு எதிராக (4-வது ஓவர்) சூர்யவன்ஷி மட்டையை சுழற்றிய விதம் அபாரமானது.
3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என புரட்டியெடுத்த சூர்யவன்ஷி. டி 20 போட்டிகளில் சிக்கனமாக வீசக்கூடிய வாஷிங்டன் சுந்தரையும் விட்டுவைக்கவில்லை. அவரது ஓவரிலும் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என தெறிக்கவிட்டார். தொடர் முழுவதும் சீராக வீசி பந்த பிரசித் கிருஷ்ணாவையும் பதம்பார்த்தார். அத்துடன் அறிமுக வீரரான ஜனம் கரிம் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன்30 ரன்கள் வேட்டையாடி குஜராத் அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.
16 வயதில் சச்சின் டெண்டுல்கர் நாட்டிற்காக விளையாடுவதற்கு முன்பு ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போன்ற கடினமான போட்டிகளை கடந்தார். 17 வயதில் பார்த்திவ் படேல் முதல் தர கிரிக்கெட் அனுபவம் இல்லாமல் வந்து இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி தோல்வியில் இருந்து காப்பாற்றி கொடுத்தார். ஆனால் 14 வயதில் அதிலும் அதிக திறனும், டெக்னிக்கும் தேவைப்படும் டி 20-ல் புதிய நாயகனாக உருவெடுத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
எம்.எஸ்.தோனியின் வருகை சிறிய நகரங்களைச் சேர்ந்த இளம் வீரர்களிடையே நம்பிக்கையை அதிகரித்தது. தற்போது சூர்யவன்ஷியின் ஆட்டம் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு 14-15 வயது சிறுவர்களும் தங்களது கிரிக்கெட் பயணத்தை எவ்வாறு கட்டமைக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக அமையக்கூடும். எதிர்காலத்தில் இந்தியாவில் கிரிக்கெட் இனி பழமைவாதத்துடன் இருக்காது வேறு பாணியை நோக்கி பயணிக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.
சச்சினுடன் ஒப்பிடக்கூடாது: வைபவ் சூர்யவன்ஷி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும்போது, ‘‘ஐபிஎல் போட்டியில், திறமையான பந்துவீச்சுத் தாக்குதலுக்கு எதிராக வைபவ் செய்த சாதனை மிகப்பெரியது. அவர் திறமைவாய்ந்த பேட்ஸ்மேன். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் நீண்ட காலம் விளையாட முடியும். அவரது திறமையை கவனித்து வருகிறோம். பந்தை சரியாக கவனித்து அதை மிகவும்
வேகமாக விளாசுவது அவரது சிறப்பு. அவரதுகிரிக்கெட் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. அதேநேரத்தில் 16 வயதில் அறிமுகமான இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் வைபவ் சூர்யவன்ஷியை ஒப்பிடுவது நியாயமற்றது. இவ்வளவு சீக்கிரம், சச்சினுடன் வைபவை நாம் ஒப்பிடக்கூடாது. அவர் இப்போதுதான் வளர்ந்து வரும் வீரர்’’ என்றார்.
பாராட்டு மழை:
சச்சின் டெண்டுல்கர்: அச்சமற்ற அணுகுமுறை, பேட்டிங் வேகம், பந்தின் லென்ந்த்தை விரைவாக அடையாளம் காணும் திறன், பந்தின் பின்னால் ஆற்றலை மாற்றுவது ஆகியவை அற்புதமான வைபவ் சூர்யவன்ஷியின் இன்னிங்ஸ் பின்னால் உள்ளது. 38 பந்துகளில் 101 ரன்கள். அற்புதமாக விளையாடினீர்கள்.
பிரையன் லாரா: நான் மகிழ்வித்தேனா? நீங்கள் நிச்சயமாக என்னை மகிழ்வித்தீர்கள்.
யூசுப் பதான்: ஐபிஎல் தொடரில் இந்தியர் ஒருவரின் அதிவேக ஐபிஎல் சதமாக இருந்த எனது சாதனையை முறியடித்த இளம் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். என்னைப் போலவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும்போது இது நடப்பதைப் பார்ப்பது இன்னும் சிறப்பு. இளம் வீரர்களுக்கு இந்த அணியில் உண்மையிலேயே ஏதோ மாயாஜாலம் இருக்கிறது. போக வேண்டிய தூரம் அதிகம், சாம்பியன்.
இயன் பிஷப்: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 2025-ம் ஆண்டில் 35 பந்துகளில் ஐபிஎல் சதத்தை அடித்து நொறுக்கியுள்ளார். வியப்பூட்டுகிறது. யுவராஜ் சிங்: 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த குழந்தை உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களை கண் இமைக்காமல் எதிர்கொள்கிறது. வைபவ் சூர்யவன்ஷி பெயரை நினைவில் கொள்ள வேண்டும். அச்சமற்ற அணுகுமுறையுடன் விளையாடுகிறார். அடுத்த தலைமுறை ஒளிர்வதைக் காண்பது பெருமையாக உள்ளது.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: இந்தியா புதிய ஸ்டாரை கண்டுபிடித்துவிட்டது. 14 வயதில், பெரும்பாலான குழந்தைகள் கனவு காண்கிறார்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் குஜராத் அணிக்கு எதிராக அற்புதமாக சதம் விளாசியுள்ளார். வயதுக்கு மீறிய நிதானம், தரம், தைரியம் அவரிடம் உள்ளது.
ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். பிஹாரைச் சேர்ந்த 14 வயதான அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அவரது திறனை பாராட்டியுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளார்.
‘6 பந்தில் ஐபிஎல் ஒப்பந்தம்’ – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் கூறும்போது, ”வீரர்கள் தேர்வில் முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்த பிறகு பயிற்சியாளர் ராகுல் திராவிட், உயர் செயல்திறன் இயக்குநர் ஜுபின் பருச்சா, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோர் இந்த சிறுவனிடம் அற்புதமான திறமை உள்ளதை ஒப்புக்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக, நாங்கள் அவரை ஏலத்தில் எடுத்தோம். ஏலத்திற்குப் பிறகு, அவர் நாக்பூரில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸின் உயர் செயல்திறன் மையத்தில் எங்களுடன் மூன்று மாதங்கள் செலவிட்டார், அங்கு அவர் மிகவும் கடினமாக உழைத்தார்.
நாக்பூர் உயர் செயல்திறன் மையத்தில் சூர்யவன்ஷி முதல் ஓவரை விளையாடிய விதத்தில் இருந்து அவரிடம் உள்ள திறமையை அறிந்தோம். அங்கிருந்துதான் ராகுல் திராவிட்டும், ஜுபினும் என்னை அழைத்து, சூர்யவன்ஷியின் மீது ஒரு கண் வைத்திருக்கும்படியும், அவரது பெற்றோருடன் பேசும்படியும் கூறினார்கள்” என்றார்.