திருவட்டாரை அடுத்த ஆற்றூர் சந்திப்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன், உட்பட திமுக தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியதாவது: – கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மகளிர் உரிமை திட்டம் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாறியுள்ளனர்.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு நல்ல பயன் தரும் திட்டமாகும். இதுபோன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் பலன் பெற்றுள்ளனர். ஒன்றிய அரசு எம்பிக்களின் எண்ணிக்கையை சில மாநிலங்களில் குறைக்கவும் சில மாநிலங்களில் அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது. தமிழகத்தில் 39 இருந்து 31 ஆக குறைக்கும் திட்டத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டால் மட்டுமே தான் செருப்பு அணிவதாக அண்ணாமலை கூறியுள்ளார். இன்னும் ஏழேழு ஜென்மங்களுக்கும் அவர் செருப்பு அணிய வாய்ப்பு இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.