மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற 2 லீக் ஆட்டங்களிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரிடமிருந்து பெரிய அளவில் இன்னிங்ஸ்கள் வெளிப்படவில்லை. எனவே, இன்றைய ஆட்டத்தில் அவர்கள் 2 பேரும் தங்களது சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தக்கூடும். கடந்த 2 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா ஆகியோர் இன்றைய ஆட்டத்திலும் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் என்ற நிலையிலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் என்ற நிலையிலும் இருந்தபோது இந்திய அணியின் நடுவரிசை வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தைத் தந்து நல்ல ஸ்கோரை எட்ட உதவினர்.
அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்க 2 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் தோல்வி, மற்றொன்றில் வெற்றி என்ற நிலையில் களமிறங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணியில் டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லுஸ், லாரா வோல்வார்ட், மரிஜான் காப், அன்னேக்கே போஷ் ஆகியோர் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.
அதேபோல் பவுலிங்கில் நோன்கு லாபா, அயபோங்கா காகா, காப், மசபாட்டா, கிளாக், குளோ டைரன் ஆகியோர் எதிரணியை மிரட்டக் காத்திருக்கின்றனர்.பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.