இரணியல் அருகே ஆலன்விளை தேவாலயம் அருகே குழித்துறை மறைமாவட்டத்திற்குட்பட்ட தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் பணம் டெபாசிட் செய்திருந்தனர். கடந்த ஆண்டிலிருந்து டெபாசிட் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அப்பகுதியினர் இரணியல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மூன்று மாதங்களில் பணத்தை திருப்பிக் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுக்கப்படவில்லை.
பின்னர் நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையிலும் பணம் கொடுக்கப்படவில்லை. பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நேற்று 15ஆம் தேதி ஆலன்விளை ஆலயம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு விஜயகுமார் தலைமை வகித்தார். மேலும் பணத்தை இழந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இரணியல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிதி நிறுவனத்தினர் சொத்துக்களை விற்க மறைமாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், விற்பனை செய்த பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு திரும்பக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.














