உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் உண்டியல் மூலம் ரூ.1,365 கோடி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இதில் வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பது வழக்கம். பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் தினமும் சுமார் 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர் கள் ஏழுமலையானை நீண்ட வரிசைகளில் காத்திருந்து தரிசிப்பர்.
ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பக்தர்களின் உண்டியல் காணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
12 கோடி லட்டுகள் விற்பனை: கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் ஏழுமலையானை 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ரூ.1,365 கோடியை உண்டியல் மூலம் மட்டுமே பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.