எஞ்சிய 3 ஆட்டங்களிலும் நிலைமையை மாற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. 236 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தோல்வி சந்தித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 40 பந்துகளில், 74 ரன்களும் அப்துல் சமத் 24 பந்துகளில் 45 ரன்களும் விளாசினர்.
டாப் ஆர்டரில் எய்டன் மார்க்ரம் 13, மிட்செல் மார்ஷ் 0, நிகோலஸ் பூரன் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பார்முக்கு திரும்புவதற்கு தடுமாறி வரும் கேப்டன் ரிஷப் பந்த் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து நடையை கட்டினார். லக்னோ அணிக்கு இது 6-வது தோல்வியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் சேர்த்து பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
தற்போதைய தோல்வியால் லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கடினமாகி உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இதில் அனைத்திலும் லக்னோ வெற்றி பெற்றாலும் லீக் சுற்றை 16 புள்ளிகளுடனே நிறைவு செய்ய முடியும். இது நிகழ்ந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே லக்னோ அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும். இது ஒருபுறம் இருக்க தற்போதைய நிலையில் லக்னோ அணியின் நிகர ரன் ரேட் விகிதம் -0.47 ஆக இருக்கிறது. இது அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்புக்கு இடையூறாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் எங்களது கனவு இன்னும் உயிர்ப்பிப்புடன் இருக்கிறது. அடுத்த 3 ஆட்டங்களில் நாங்கள் வெற்றி பெற்றால், நிச்சயமாக சூழ்நிலையை மாற்றி அற்புதமான விஷயங்களை செய்ய முடியும். பந்துவீச்சில் அதிகமான ரன்களை வழங்கிவிட்டோம். முக்கியமான கேட்ச்களை தவறான நேரத்தில் தவறவிட்டால், அது உங்களை மோசமாக காயப்படுத்தும். தொடக்கத்திலேயே நாங்கள் சிறந்த லென்ந்தில் பந்துவீசவில்லை. ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி.
டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நீங்கள் நம்ப முடியாது. இது விளையாட்டின் ஒரு பகுதி, சில நேரங்களில் பேட்டிங்கை நாங்கள் ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும். நாங்கள் அதிக ரன்களை துரத்திபிடிக்க வேண்டியது இருந்தது. அது எங்களை மோசமாக காயப்படுத்தியது” என்றார்.