பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்) ஒழிப்பு இயக்கம் சார்பில் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழகம் தழுவிய வாகன பேரணி மூன்று குழுக்களாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை மாவட்டம் வாளையார், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உள்ளிட்ட மூன்று இடங்களில் இருந்து மூன்று குழுக்களாக வாகன பிரச்சாரம் இன்று துவங்கியது.
களியக்காவிளையில் இருந்து இன்று துவங்கிய வாகன பிரச்சாரத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநில ஆலோசகர் கண்ணன் வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் பேசினார்.
களியக்காவிளையில் இருந்து துவங்கிய வாகன பிரச்சாரம் படந்தாலுமூடு, குழித்துறை, மார்த்தாண்டம், காட்டாத்துறை, அழகிய மண்டபம், தக்கலை, வில்லுக்குறி, பார்வதிபுரம், வடசேரி, கோவாளை, ஆரால்வாய்மொழி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக மே 16-ம் தேதி சென்னையில் நிறைவடையும்.