நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அன்பு நகர் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சாமியார் வேடம் அணிந்த மூன்று பேர் வந்தனர். குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கேட்ட போது அவர் வீட்டுக்குள் தண்ணீர் எடுக்கச் சென்றார்.
தண்ணீர் எடுத்து வருவதற்குள் வீட்டுக்குள் சென்ற சாமியார் உங்கள் வீட்டில் ஏதோ கெட்ட சக்தி அல்லது திருஷ்டி இருக்கிறது என்று கூறினார்.
பின்னர் வீட்டை சுற்றிப் பார்த்த அந்த சாமியார் மஞ்சள் தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். அந்த பெண் தண்ணீரில் மஞ்சளை கரைத்து எடுத்து வந்து அந்த நபரிடம் கொடுத்த போது பெண்ணின் முகத்தில் அந்த தண்ணீரை வேகமாக தெளித்திருக்கிறார். கையில் மறைத்து வைத்திருந்த பொடியையும் சேர்த்து முகத்தில் தெளித்ததால் அந்த பெண் மயக்கம் அடைந்தார். பின்னர் அங்கிருந்த வெள்ளி சிலையை எடுத்துக்கொண்டு மூன்று பேரும் தப்பி சென்றனர்.
மயக்கம் தெளிந்து பார்த்தபோது வீட்டில் சாமியார் வேடம் அணிந்தவர்கள் இல்லாததும், சிலை திருட்டு போனதும் தெரிய வந்தது. சாமியார் உருவம் அப்பகுதியில் உள்ள சி.சி. டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவம் நடைபெற்ற நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் பகுதியில் மேலும் மூன்று வீடுகளில் கொள்ளை நடைபெற்றுள்ளது. கோட்டார் ரயில்வே காலனியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 13.5 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சி.சி .டி .வி . கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.















