பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்: சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகள் கட்ட திட்டம்

0
33

ஜம்மு காஷ்மீரின் பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

சிந்து நதி கட்டமைப்பில் சிந்து, ஜீலம், செனாப், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 6 நதிகள் உள்ளன. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போதே சிந்தி நதி நீர் பிரச்சினை எழுந்தது. அப்போது நாடு நாடுகளுக்கும் இடையே தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. 1948 மார்ச் 31-ல் ஒப்பந்தம் காலாவதியானது. அதன்பிறகு இந்தியாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்தது. சுமார் 17 லட்சம் ஏக்கர் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டது.

இதன்பிறகு உலக வங்கியின் சமரசத்தின்பேரில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமார் 10 ஆண்டுகள் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்படி கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி இரு நாடுகளிடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதமர் நேரு, அன்றைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தற்போதைய சூழலில் சிந்து நதி கட்டமைப்பில் உள்ள 6 நதிகளின் தண்ணீரில் 47 சதவீதத்தை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. இந்தியா 39%, சீனா 8%, ஆப்கானிஸ்தான் 6 சதவீத தண்ணீரை பயன்படுத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான் இடையே 3 போர்கள் நடைபெற்றபோதுகூட பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்திவைத்திருக்கிறது.

இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக காஷ்மீரின் ஜீலம் நதியில் கட்டப்பட்டுள்ள கிசன்கங்கா அணையில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

6 புதிய அணைகள் கட்ட திட்டம்: சிந்து நதி கட்டமைப்பில் 6 இடங்களில் புதிய அணைகளை கட்ட ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் காரணமாக இந்த இடங்களில் அணைகள் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்பட்டிருப்பதால் காஷ்மீரின் சாவல்கோட், கிர்தாய், பகல் துல் உட்பட 6 இடங்களில் புதிதாக அணைகள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடங்களில் நீர்மின் நிலையங்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 6 நீர்மின் நிலையங்கள் மூலம் 10,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் விவசாயம், குடிநீர் ஆதாரம் முழுமையாக சிந்து நதி கட்டமைப்பையே சார்ந்திருக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் 90 சதவீத விவசாயம் சிந்து நதி கட்டமைப்பின் 6 நதிகளை சார்ந்து இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டில் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போதே சிந்து நதிகளில் பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் உலக வங்கி உட்பட சர்வதேச அமைப்புகளின் வேண்டுகோளால் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டது.

தற்போதைய சூழலில் ரவி, சட்லஜ் நதிகளில் புதிய அணைகளை கட்டும் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதோடு ஏற்கெனவே இருக்கும் அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்தவும் மத்திய நீர் வளத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

பழைய அணைகளின் நீர்மட்டம் உயர்வு மற்றும் புதிய அணைகளைக் கட்டுவதால் வடமாநிலங்களில் விவசாயம் செழித்தோங்கும். மேலும் நீர் மின் நிலைய திட்டங்களால் மின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும். அதேநேரம் சிந்து நதி கட்டமைப்பில் இருந்து தண்ணீர் கிடைக்காமல் பாகிஸ்தான் பாலைவனமாக மாறும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here