ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில் அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதால் பதற்றம் தொடர்கிறது.
இருதரப்பு இடையிலான மோதலை தவிர்க்க ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதே வேளையில், சர்வதேசக் கடல்சார் வர்த்தகப் பாதைகளுக்கு இடையூறு விளைவித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரானிய கடற்படையால் ஆபத்து நேரிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களைப் பிராந்திய எல்லைக்கு அருகே கொண்டு வந்துள்ளதாக ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க பாதுகாப்புப் படைகளின் இந்த நகர்வு, ஈரானுக்குக் கொடுக்கும் நேரடி அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், மறுபுறம் போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை மற்றும் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.















