தமிழ்நாடு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மாநில அளவிலான பேச்சு,கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்போருக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெறுவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டநாள் தமிழ்நாடு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டி நடத்தப்படுகின்றன. இது வெறும் போட்டி மட்டுமல்ல.
நமது தமிழ்மொழியின் பெருமையுடன் தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் பெருவிழா ஆகும். எனவே, இந்த போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் ஆவல்.
தமிழ்நாடு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் பரிசும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கி பெருமைப்படுத்த உள்ளோம்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தமிழ்வளர்ச்சித் துறை வாயிலாக மாவட்ட அளவிலான போட்டியை ஜூலை 15-ம் தேதிக்குள் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களை இந்த போட்டிகளில் உற்சமாகமாக பங்கேற்கச் செய்து தமிழ்நாடு விழாவை ஒரு சரித்திர புரட்சியாக மாற்றிக்காட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.















