3 மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
103

 உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் மீதுநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சில மாநிலங்களில் குற்றச் செயலில்ஈடுபடுவோருக்கு சொந்தமான கட்டிடங்களை (விதிகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி) உள்ளாட்சி நிர்வாகத்தினர் இடித்தனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இதுபோன்ற கட்டிடங்களை இடிக்கக் கூடாது என செப்டம்பர் 17-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், “ஹரித்வார் (உத்தராகண்ட்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் கான்பூர் (உத்தர பிரதேசம்) ஆகிய நகராட்சி அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறாமல் சில கட்டிடங்களை இடித்துள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று பரிசீலிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இந்த விவகாரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில்லாத ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here