ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோனி அல்பனீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அப்போது வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமருடன் நேற்று தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “எனது நண்பர் அந்தோனி அல்பனீஸ் கட்சியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்க அவருடன் பேசினேன்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை புதிய உற்சாகத்துடன் வலுப்படுத்தவும், இரு தரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை கண்டறிய இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.