குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணை தலைவர் மருத்துவர் மோகன் ராஜன் தெரிவித்தார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் ‘விழித்திரை சிகிச்சையில் முன்னேற்றங்கள்’ எனும் கருப்பொருளில் விழித்திரை சிகிச்சை குறித்த மாநாடு ‘ரெட்டிகான் 2025’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைவர் அமர் அகர்வால் தலைமையில், தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் முன்னிலையில் மாநாடு நடைபெற்றது.
வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, அகில இந்திய கண் மருத்துவ சங்க துணை தலைவர் மோகன் ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாடு முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட விழித்திரை சிகிச்சை நிபுணர்கள் பற்கேற்று சிறப்புரையாற்றினர்.
மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் என மொத்தம் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை பிராந்திய தலைவர் எஸ்.சவுந்தரி, விழிப்படிக – விழித்திரை சிகிச்சை துறை தலைவர் மனோஜ் காத்ரி, மருத்துவர்கள் பர்வீன் சென், பத்மா ப்ரீத்தா, திரிவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமர் அகர்வால் கூறும்போது, ‘‘விழித்திரை சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கண் மருத்துவர்களுக்கு தகவல் வழங்கும் தளமாக இந்த மாநாடு திகழ்கிறது. கண் பராமரிப்பில் இந்தியாவின் அசாத்திய திறனையும் இது நிலைநாட்டுகிறது’’ என்றார்.
மருத்துவர் மோகன் ராஜன் கூறியபோது, ‘‘நாடு முழுவதும் உள்ள 35 ஆயிரம் கண் மருத்துவர்களில், 2,000 பேர் மட்டுமே விழித்திரை சிகிச்சை நிபுணர்கள். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் விழித்திரைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 100 மில்லியன் பேரில் 20 மில்லியன் பேருக்கு விழித்திரை பாதிப்பு உள்ளது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் விழித்திரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், விழித்திரையில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும்” என்றார்.