தமிழகத்தில் நேற்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், அதை தணிக்கும் விதமாக நேற்று மாலை பலத்த காற்றுடன் கோடை மழை பெய்து சென்னை புறநகரை குளிர்வித்தது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் வாட்டி, வதைத்து வருகிறது. இருப்பினும் இடையிடையே, ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது.
சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்து வந்தது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து, வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். மாநகராட்சி சார்பில் 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களில், வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை நிழற்பந்தல்களை அமைத்துள்ளது.
அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே கடந்த ஒரு மாதமாக நீர் மோர் பந்தல்கள் அமைத்து, பொதுமக்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, ரோஸ் மில்க், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி பழம், இளநீர் போன்றவற்றை வழங்கி வந்தன. இதற்கிடையில், நேற்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது.
வரும் மே 28-ம் தேதி வரை நீடிக்கும் கத்திரி வெயில் காலத்தில், சென்னை, புறநகரில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் மாலையில் சென்னை மாநகரில் திடீரென சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர், திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதிகளில் பரவலாக, பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
நீட் தேர்வு மாணவர்கள் பாதிப்பு: மேலும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம், வண்டலூர், பல்லாவரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. திருவொற்றியூர், ஆவடி உள்ளிட்ட சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் மின் வெட்டு காரணமாக, இருளில் மூழ்கிய அறைகளில் மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் நிலை ஏற்பட்டது.
சென்னை, புறநகரில் கத்திரி வெயில் காரணமாக காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலையில் பெய்த மழை, மாநகர், புறநகரை குளிர்வித்தது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.