மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு தமிழக அரசு ‘மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ என பெயர் சூட்டியது.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 5 இடங்களில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டன. சேலையூர் கேம்ப் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை, அருகிலுள்ள கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கடை உரிமையாளர் மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து இடையூறு இல்லாத வேறு இடத்தில் பெயர் பலகையை அமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் அதை பெயர்த்து எடுத்தது. இதற்கிடையே பெயர் பலகையை மர்ம நபர்கள் பிடுங்கிச் சென்று விட்டதாக தகவல் பரவியது. பின்னர், மாநகராட்சி நிர்வாகம் வேறு இடத்தில் பெயர் பலகையை அமைத்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஆரம்பத்திலேயே பெயர் பலகையை அமைத்திருக்க வேண்டும்.
அல்லது பெயர் பலகையை அகற்றிய உடனேயே மாற்று இடத்தில் அமைத்திருந்தால் இதுபோன்ற சர்ச்சை ஏற்பட்டிருக்காது. மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம். சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.















