கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி ராஜன் (51). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிகிறார். இவரின் தாயருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் தாயாரை பளுகல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் தாயாரின் சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், தான் வேலை பார்க்கும் நிறுவன முதலாளியிடம் சென்று பணம் கடன் கேட்பதற்காக சென்றார். ஆனால் அங்கு காவலாளியாக பணிபுரிந்த அஸ்வின் (26) என்பவர் ஆண்டனி ராஜனை உள்ளே செல்ல அனுமதி மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை எடுத்து ஆண்டனி ராஜன் அங்கிருந்து தனது நிறுவனத்தின் சொந்தமான குடோனுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த காவலாளி அஸ்வின் திடீரென கத்தியை எடுத்து மிரட்டியதுடன், கத்தியின் பின்புறத்தால் ஆண்டனி ராஜன் கால் பகுதியில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஆண்டனி ராஜன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அஸ்வின் மீது பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.