ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் நீதி வென்றுள்ளது என்று பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தினர். இதனை தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ‘நீதி வென்றது’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் குஹாவும் ஒருவர். சமீர் குஹாவின் மனைவி சார்போரி குஹா கூறும்போது, “இது நடக்க வேண்டிய ஒன்றுதான். தீவிரவாதத்தை ஆதரிக்கும் மொத்த பாகிஸ்தானுமே அழித்தொழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற (பஹல்காம் தாக்குதல் போன்ற) சம்பவங்கள் மீண்டும் நடக்கத்தான் செய்யும்” என்றார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கே நகரத்தில் இந்திய ராணுவம்
நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி கட்டிடம் ஒன்று பாதிப்புக்குள்ளானது.
| படம்: பிடிஐ |
பஹல்காமில் கொல்லப்பட்ட சந்தோஷ் ஜக்தாலேவின் மனைவி, பிரகதி ஜக்தாலே கூறும்போது, “அந்தத் தீவிரவாதிகள் எங்கள் மகள்களின் சிந்தூரத்தை (குங்குமம்) அழித்தார்கள். அவர்களுக்கு இந்தத் தாக்குதல் பொருத்தமான பதிலாக இருக்கும். இந்தத் தாக்குதலுக்கான பெயரைக் கேட்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது. அரசுக்கு மனதார நன்றி கூறுகிறேன். பிரதமர் மோடி இந்த பதிலின் மூலம் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவார் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றொருவரான சுபம் திவேதியின் மனைவி அஷான்யா திவேதி கூறும்போது, “என் கணவரின் மரணத்துக்கு பழிவாங்கியதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இது ஆரம்பம்தான். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் வரை பிரதமர் மோடி நிறுத்த மாட்டார் என்பது எனக்குத் தெரியும். தீவிரவாத இடங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்ற நம்பிக்கையை அவர் எங்களுக்கு அளித்துள்ளார்” என்றார்.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபராபாத்
தில், இந்தியா நேற்று நடத்திய தாக்குதலில், தீவிரவாத முகாம்
அருகேயுள்ள பிலால் மசூதி சேதம் அடைந்தது.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த குஜராத்தின் சுமித், அவரது மகன் யதீஷ் பார்மரின் உறவினர் ஒருவர் கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சரி. இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். உலகத்தில் இருந்து தீவிரவாதம் அழிக்கப்படவேண்டும்” என்றார். அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த டேக் ஹைலாங், அவரது சகோதரர் டேக் லாலிங் கூறும்போது, “இந்தத் தாக்குதல் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அடியாகும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
தாக்குதலில் கொல்லப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த பிரசாந்த் சத்பதியின் மனைவி பிரியதர்ஷினி கூறும்போது, “மத்திய அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனது கணவர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார். அதே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியுள்ளது. உலகத்தில் தீவிரவாதம் அழியும்வரை இந்த ஆபரேஷன் தொடரவேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு நாம் பாடம் கற்றுத்தரவேண்டும்” என்றார்.
இந்திய பாதுகாப்புப் படை நேற்று நடத்திய துல்லிய
தாக்குதலில், பாகிஸ்தானின் பஹவல்பூர் அருகே அகமதுபூரில்
உள்ள இஸ்லாமிய மதரஸா இடிந்து தரைமட்டமானது.
தாக்குதலில் உயிரிழந்த கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த என். ராமச்சந்திரனின் மகள் ஆரத்தி கூறும்போது, “இந்த நாளுக்காகத்தான் இதுநாள் வரை காத்திருந்தோம். நாங்கள் காத்திருந்ததற்கு நீதி கிடைத்துவிட்டது. எங்களுக்கு இப்போது நிம்மதியாக இருக்கிறது. இந்த ஆபரேஷனுக்கு சிந்தூர் என்ற பெயர் வைத்தது சரியானது. இந்த ஆபரேஷனுக்கு இதை விட சரியான பெயரை யாராலும் கண்டறிய முடியாது. இந்திய முப்படைகளுக்கு நான் வணக்கம் தெரிவிக்கிறேன்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தி, பெண்களின் வாழ்க்கையில் பேரழிவைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரவாதிகள் இறங்கினர். அனைத்து இந்தியப் பெண்களும் கண்ணீர் சிந்திக்கொண்டு வாழப் போவதில்லை என்பதை அவர்கள் (தீவிரவாதிகள்) புரிந்துகொள்ளட்டும். தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளட்டும்” என்றார்.
தாக்குதலில் உயிரிழந்த மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சுஷில் நாதன்னியேலின் மனைவி ஜெனீபர் கூறும்போது, “இத்தகைய தாக்குதலை நடத்திய மத்திய அரசுக்கு நன்றி. என் கணவர் மீது 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு மிருகம் கூட அதுபோன்ற செயலைச் செய்யாது. அந்த 4 தீவிரவாதிகளும் கொல்லப்படவேண்டும்” என்றார்.
பாகிஸ்தானின் முரிட்கே நகரில் இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலில்
அரசு சுகாதாரம் மற்றும் கல்வி நிலைய வளாகத்தில் நொறுங்கிக் கிடக்கும் ஒரு கட்டிடம்.
திருமணம் முடிந்து தேனிலவு கொண்டாடச் சென்ற ராணுவ லெப்டினன்ட் வினய் நர்வால் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தார். இதுகுறித்து தாய் ஆஷா நர்வால் கூறும்போது, “ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடியை ராணுவம் கொடுத்துள்ளது. பஹல்காமில் உயிரிழந்த அனைவருக்கும் இதன்மூலம் நீதியும், அஞ்சலியும் கிடைத்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை தீவிரவாதிகள் தொடங்க முடியாதபடி நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளனர்” என்றார்.
வினய் நர்வாலின் மாமனார் சுனில் சுவாமி கூறும்போது, “பஹல்காம் தாக்குதலுக்கு எப்போது பதிலடி கிடைக்கும் என்று வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி, கேட்டுக் கொண்டே இருந்தார். தற்போது தக்க பதிலடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. பஹல்காம் சம்பவத்தால் தங்களது கணவர்களை இழந்த விதவைகளுக்கு நீதி கிடைத்துள்ளது.” என்றார்.
மோடியும் சிந்தூரும்… – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். அப்போது, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள், ஆண்கள் மற்றும் பெண்களை தனித்தனியாக நிற்க வைத்து அவர்களின் மத அடையாளத்தை கேட்டுள்ளனர். பின்னர், இந்து ஆண்களை மட்டும் அவர்களுடைய மனைவி மற்றும் பிள்ளைகள் முன்னிலையில் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.
பொதுவாக திருமணமான இந்து பெண்கள் நெற்றியில் குங்குமம் (சிந்தூர்) வைத்துக் கொள்வது வழக்கம். கணவன் இறந்துவிட்டால் குங்குமம் வைப்பதில்லை. பஹல்காம் தாக்குதல் 25 பெண்களின் குங்குமம் அழிய காரணமாக அமைந்தது. இதை நினைவுகூரும் வகையில்தான் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பிரதமர் மோடி பெயர் சூட்டியதாகக் கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு லோகோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இதில், சிந்தூர் என்ற வார்த்தையில் உள்ள ஒரு ‘ஓ’ எழுத்துக்குள், கிண்ணத்தில் இருந்த குங்குமம் சிதறி இருக்கிறது. பஹல்காமில் 25 பெண்களின் கணவர் உயிரைப் பறித்த இரக்கமற்ற செயலை உணர்த்தும் விதமாக பதிலடி தாக்குதலுக்கு இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.