பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய விமானப்படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது நேற்று 24 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஸ்கால்ப் மற்றும் ஹேமர் வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் ஸ்கால்ப் ஏவுகணை 1,300 கிலோ எடை கொண்டது. ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களில் இந்த ஏவுகணையை பொருத்த முடியும். இந்த ஏவுகணை தொலை தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும். இந்த ஏவுகணையை எம்பிடிஏ என்ற ஐரோப்பிய நிறுவனம் தயாரிக்கிறது.
பதுங்கு குழிகள் மற்றும் முக்கிய கட்டிடங்களை தகர்ப்பதற்கு இந்த ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரைன் ஸ்கால்ப் வகை ஏவுகணைகளை பயன்படுத்தியது. ஹேமர் ஏவுகணைகள் குறுகிய தூர தரை இலக்குகளை வானிலிருந்து தாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதை பிரான்ஸ் நாட்டின் சஃப்ரான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த ஏவுகணைகள் மூலம் நிலையான இலக்குகள் அல்லது நகரும் இலக்குகள் மீது துல்லிய தாக்குதல் நடத்த முடியும். இதில் ஜிபிஎஸ், அகச்சிவப்பு இமேஜிங் மற்றும் லேசர் கருவிகள் உள்ளன. இந்த இரண்டு வகை ஏவுகணைகளை பயன்படுத்திதான் தீவிரவாத முகாம்கள் மீது நேற்று விமானப்படை தாக்குதல் நடத்தியது.