கடலுக்குள் காற்றாலை மின்னுற்பத்தி செய்வது தொடர்பாக, டென்மார்க் நாட்டு எரிசக்தி முகமை அதிகாரிகளுடன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கடலுக்குள் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இத்திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. கடலில் அமைக்கப்படவுள்ள காற்றாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், கடலுக்குள் காற்றாலை மின்னுற்பத்தி செய்வது தொடர்பாக, டென்மார்க் நாட்டின் டேனிஷ் எனர்ஜி ஏஜென்சி, டென்மார்க் தூதரகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் இடையே உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், டென்மார்க்கின் எரிசக்தி முகமை துணை இயக்குநர் ஸ்டைன் லெத் ரச்முசன், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், உலகளாவிய ஒத்துழைப்பு மைய சிறப்பு ஆலோசகர் கரோலின் செஜர் டம்கார்ட் மற்றும் மின்வாரிய உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். கடலுக்குள் காற்றாலை மின்னுற்பத்தி அமைப்பை ஏற்படுத்த சிறந்த தொழில்நுட்ப கட்டமைப்புகள் டென்மார்க் நாட்டிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.