சென்னை கிண்டி, அரிமா சங்க லேபர் காலனி பகுதியில் அரிமா சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமை நேற்று நடத்தின. இதனை தொடங்கிவைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதேபோல், டெங்கு இறப்புகளும் படிப்படியாக குறைந்துள்ளன. நடப்பாண்டில் தற்போது வரை 7 பேர் டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். வீடுகளை ஒட்டி மழைநீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.