குமரி மாவட்டத்தின் இரண்டாவது தலைநகராக திகழும் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடியினை போக்கிடும் வகையில் இரண்டரை கி.மீ நீளம் கொண்ட மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2018ல் திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்துகள் காந்தி மைதானம் சந்திப்பில் இம்மேம்பாலத்தில் நின்று செல்கின்றன. இதையொட்டி பயணிகள் நிற்பதற்கு என இங்கு நிழற்குடை அமைக்கப்பட்டது. இது கடந்த இரண்டு வருடகாலமாக தாங்கு கம்பிகள் வளைந்து தலைகவிழ்ந்து விழும் நிலையில் உள்ளது. குறிப்பிட்ட மேம்பாலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சமூக பொது நல இயக்கம் என்ற அமைப்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை குறிப்பிட்ட மேம்பாலத்தில் நிழற்குடை அமைக்க தாங்கள் திட்டமிடவில்லை என தெரிவித்து உள்ளது.
மாற்றுத்திறனாளிகள், உடல் பலவீனம் உடையவர்கள், வயோதிகர் மகளிர் உள்ளிட்டோருக்கு எனவும், மழை, வெயில், இரவு காலங்களில் பயணிப்போருக்கு பயன்படும் வகையில் இப்பேருந்து நிறுத்த நிழல்குடை அமைக்கப்படவில்லை என அதிகாரிகள் பதில் தெரிவித்து உள்ளனர். அப்படி என்றால் இந்த நிழல்குடை யாருக்காக, எதற்காக, ஏன் அமைக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.