பார்வதிபுரம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மனைவி பகவதி அம்மாள் (43). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் மூத்த மகளை இரணியல் பகுதிக் கள்ளியங்காட்டில் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். நேற்று இரவு மூத்த மகளைப் பார்ப்பதற்காகப் பகவதி அம்மாள் கள்ளியங்காடு பகுதிக்குச் செல்லும் பஸ்ஸில் வந்தார். பஸ்ஸிலிருந்து இறங்கிய பகவதி அம்மாள் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது சுங்கான் கடையிலிருந்து வேகமாக வந்த பயணிகள் ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாகப் பகவதி அம்மாள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்துடன் மீட்டுக் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதுகுறித்தப் புகாரின்பேரில் விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் முருகன் (57) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.