கிள்ளியூர் தாலுகாவில் நீதிமன்றம் அமைக்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ சட்டசபையில் கோரிக்கை வைத்தார் அடிப்படையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது தற்காலிக நீதிமன்றம் கருங்கல் அருகே உள்ள பாலபள்ளம் பகுதியில் அமைக்க ஆய்வு செய்தனர். நிரந்தர நீதிமன்றம் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றின் மறுகரையில் உள்ள ஊராட்சிகள் மற்றும் கொல்லங்கோடு நகராட்சி மற்றும் கடற்கரை கிராமங்களின் மக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 25 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிள்ளியூர் ஒன்றியத்தின் மையப் பகுதியான புதுக்கடையில் இந்த நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என கேட்டு அனைத்து கட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலையில் புதுக்கடை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பு தலைவர் ரகுபதி தலைமையில், குழித்துறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முஞ்சிறையில் உள்ள அரசு மாணவர்கள் விடுதி கட்டடத்தில் தற்காலிக நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனவும், புதுக்கடை காவல் நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிரந்தர நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.