களியக்காவிளை அருகே காரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (62). இவர் களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள பெந்தேகொஸ்தே சபையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போதகராக இருந்து வந்தார்.
இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பாறசாலையில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்தார். காராளி பகுதியில் வந்தபோது பின்னால் காலியாக வந்த கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக லாரி பைக் மீது மோதியது. இதில் போதகர் விஜயன் தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து பாறசாலை போலீசார் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.