2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது. அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விஜயகாந்த் மீதான இரங்கல் தீர்மானத்துக்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரிகம். 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்குவது என்பது ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும்.
கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணிநேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.