குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் அரியலூர் மாவட்டம் ஸ்ரீராமர் பள்ளிக்கூடத் தெரு பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் (21), தர்மபுரி மாவட்டம் முத்துக்குமார் (21), தூத்துக்குடி மாவட்டம் சஞ்சீவ் (20), திருவண்ணாமலை மாவட்டம் கண்ணன் (20) ஆகியோர் படித்து வருகிறார்கள். இவர்கள் நான்கு பேரும் இரணியல் அருகில் அம்மாண்டிவிளையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள்.
இவர்களில் முத்துக்குமார் என்பவர் இரணியலில் உள்ள ஒரு தனியார் பார்மசியில் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார். நேற்று (பிப்ரவரி 3) முத்துக்குமார் வேலைக்குச் சென்று விட்டு இரவில் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரணியல் – முட்டம் சாலையில் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்து பாய்ந்தது. இதில் பைக் நாய் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கீழே விழுந்த முத்துக்குமார் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.