ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், ககான்கிர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கவுன்ட்டர்-இன்டெலிஜென்ஸ் காஷ்மீர் (சிஐகே) அதிகாரிகள் காஷ்மீரின்சில பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிஐகே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீநகர், கந்தர்பால், பண்டி போரா, குல்காம், பட்காம், அனந் த்நாக் மற்றும் புல்வாமா ஆகிய மாவட்டங்களில் 10 இடங்களில் சிஐகே அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட தெஹ்ரீக் லபைய்க் யா முஸ்லிம் (டிஎல்எம்) என்ற அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் சிலர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பாகிஸ்தான் தீவிரவாதி பாபா ஹமாஸ் இந்த புதிய அமைப்பை இயக்கி வந்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கந்தர்பால் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) மண்டல அதிகாரிகள் பார்வையிட்டனர்.