மகளிர் நலத்திட்டங்களுக்கான குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு: சமூக நலத்துறை அரசாணை வெளியீடு

0
297

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களுக்கு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி சமூக நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படும்’ என அறிவித்தார். அதை செயல்படுத்தும் விதமாக சமூக நலத்துறை ஆணையர் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் சமூக நலத்துறையின் கீழ் வழங்கப்படும் ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்களில் உள்ளுரைவோர்களின் சேர்க்கை திட்டம் ஆகியவற்றுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.72 ஆயிரம் உள்ளது.

இதேபோல் தொழிற்கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, இணை உறுப்பினர் அனுமதி மற்றும் தையல் பயிற்சிகளில் சேர்க்கை திட்டத்துக்கு ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.60 ஆயிரம் உள்ளது. இத்திட்டங்களில் வருமான உச்சவரம்பை உயர்த்துவதன் மூலம் அதிகளவிலான மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள். எனவே மேற்கண்ட 5 திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து சமூக நலத்துறை ஆணையரின் கருத்துருவை நன்கு பரிசீலனை செய்த அரசு, அதை ஏற்றுக்கொண்டு சமூக நலத்துறையின் கீழ் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வரும் முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட 5 திட்டங்களுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.1.20 லட்சமாக உயர்த்தி ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here