கர்நாடக மாநில முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரில், ”எனது தந்தையை எனது தாய் பல்லவி (64), எனது சகோதரி கீர்த்தி (31) ஆகியோர் கொலை செய்திருக்கலாம். சொத்து பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவரும் அவரை கொல்ல சதி தீட்டினர்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எச்.எஸ்.ஆர்.லே அவுட் போலீஸார், ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி, மகள் கீர்த்தியை பிடித்து விசாரித்தனர். அப்போது பல்லவி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
கடந்த ஒரு வருடமாக ஓம் பிரகாஷ் என்னை அடித்து சித்ரவதை செய்து வந்தார். அவர் மீது 3 மாதங்களுக்கு முன்பு எச்.எஸ்.ஆர்.லே அவுட் போலீஸில் புகார் அளித்தேன். அந்த புகாரை ஏற்க மறுத்ததால் காவல் நிலையத்தின் வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டேன்.
ஆனால் ஓம் பிரகாஷ் தனது செல்வாக்கை பயன்படுத்தி, வழக்கு பதிவு செய்யாமல் பார்த்து கொண்டார். அவ்வப்போது துப்பாக்கியை காட்டி என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார். என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவரை கத்தியால் குத்தி கொலை செய்தேன்.
ஓம் பிரகாஷ் மதிய உணவு சாப்பிட்ட பின்னர், வறுத்த மீன் சாப்பிட்டார். அவர் மீனின் முள்ளை நீக்கி கொண்டிருந்தபோது, பின்பக்கமாக இருந்து பீர் பாட்டிலால் தலையில் அடித்தேன். பின்னர் கத்தியால் அவரை குத்தினேன். அவர் துப்பாக்கியை எடுப்பதை தடுப்பதற்காக முதலில் மிளகாய் பொடியை கண்களில் வீசினேன். அவர் சீக்கிரமாக சாக வேண்டும் என்பதற்காக கழுத்தில் இருமுறை குத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பல்லவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, கழுத்து நரம்பு, ரத்த குழாயை வெட்டுவது எப்படி என கூகுளில் தேடியது தெரியவந்தது. அவரையும் அவரது மகள் கீர்த்தியையும் பெங்களூரு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதன்பிறகு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் மத்திய சிறையில் அடைத்தனர்.