சென்னை ரன்னர்ஸ், ஃபிரெஷ் ஒர்க்ஸ் இன்க் ஆகியவை சார்பில் சென்னை மாரத்தான் போட்டியின் 13-வது சீசன் போட்டி நேற்று சென்னையில் நடத்தப்பட்டது. முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் – (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முழு மாரத்தான் போட்டியானது, நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி, மெரினா கடற்கரை பாதை வழியாக கலங்கரை விளக்கத்தை சென்றடைந்தது. அதன்பிறகு மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையில் முடிவடைந்தது. போட்டியை நேப்பியர் பாலத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி தொடங்கி வைத்தார்.
முழு மாரத்தானில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கியான் பாபு முதலிடம் பிடித்தார். பந்தய தூரத்தை அவர், 2 மணி நேரம் 25:38 நிமிடங்களில் கடந்தார். 2-வது இடத்தை அபிஷேக் சோனியும் (2:27:41), 3-வது இடத்தை மிகியாஷ் யமந்திராவும் (2:36:08) பிடித்தனர்.
மகளிர் பிரிவில் நடைபெற்ற முழு மாரத்தானில் எத்தியோப்பா நாட்டைச் சேர்ந்த செனைட் கெபெலென் முதலிடம் பிடித்தார். பந்தய தூரத்தை அவர், 3 மணி நேரம் 9:03 நிமிடங்களில் எட்டினார். சீமா (3:17:18) 2-வது இடத்தையும், பிஜோயா பர்மான் (3:32:36) 3-வது இடத்தையும் பிடித்தனர்.