பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று போனில் பேசினார். ஈரான் போர் நிலவரம் கவலை அளிப்பதாக தெரிவித்த தலைவர்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எரிபொருள் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிடில் மீண்டும் போர் தொடங்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று போனில் தொடர்பு கொண்டு பேசினார். மேற்கு ஆசிய நிலவரம் குறித்து கவலை தெரிவித்த தலைவர்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானிடம் இருந்து போன் அழைப்பு வந்தது. மேற்கு ஆசிய நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தோம். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து உடனடியாக நடைபெற வேண்டும் என்பதில் இருவரும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.














