ஐகோர்ட்டில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்துக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்த மருத்துவர்கள் எதிர்ப்பு

0
36

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்துக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்துவற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகளுக்காக டிஸ்பென்சரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏற்கெனவே இரண்டு பொது மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள், ஊழியர்கள், மனுதாரர்கள், அதில் தொடர்புடையோர் என நீதிமன்றம் சார்ந்த அனைவருக்கும் ஏதேனும் அடிப்படை சிகிச்சை தேவைப்பட்டால் அங்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இந்த டிஸ்பென்சரிக்கு இதயவியல் மற்றும் பொது நல மருத்துவத்துறை மருத்துவ நிபுணர்களை பணியமர்த்துமாறு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து இதயவியல், பொது மருத்துவத்துறை நிபுணர்கள் இரண்டு பேர் டிஸ்பென்சரிக்கு தினமும் பணிக்கு அனுப்பப்பட்டு வந்தனர்

தற்போது சுழற்சி முறையில் ஒவ்வொரு திங்களன்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமமனையிலிருந்தும், செவ்வாயன்று ஸ்டான்லியிலிருந்தும், புதன் மற்றும் வெள்ளியன்று கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்தும், வியாழனன்று ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையிலிருந்தும், வெள்ளியன்று கூடுதலாக கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையிலிருந்தும் மருத்துவ நிபுணர்களை அனுப்புமாறு மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதற்கு அரசு மருத்துவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: உயர் சிறப்பு மருத்துவர்களே ஆனாலும், மருத்துவ கட்டமைப்பு இல்லாத இடத்தில் அவர்களால் எந்த சிகிச்சையும் அளிக்க முடியாது. அந்த வகையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டிஸ்பென்சரிக்குள் மருத்துவமனைக்கான சிறப்பு வசதிகள் எதுவும் இல்லை. மாதத்துக்கு 100 பேர் கூட வராத உயர் நீதிமன்ற டிஸ்பென்சரியில் இசிஜி உபகரணத்தை இயக்க தொழில்நுட்பநர்கள் கூட இல்லை.

அங்கு, வெறுமனே மருத்துவர்களை பணிக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இதய நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கிருக்கும் மருத்துவரை, சொற்ப எண்ணிக்கையில் நோயாளிகள் வரும் சிகிச்சை மையத்துக்கு அனுப்பினால், அரசு மருத்துவமனைகளை வரும் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வருகை சரிவர இல்லை எனில் அதன் அங்கீகாரம் ரத்தாகக் கூடிய நிலை ஏற்படும். எனவே, இந்த முடிவை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏதேனும் மருத்துவ அவசர உதவி தேவைப்பட்டால் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிகிச்சை பெறுவதற்கான ஆம்புலன்ஸ் வசதிகள், உயிர் காக்கும் மருத்துவ வசதிகள், மருந்துகள், உபகரணங்களை தயார் நிலையில் வைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here