குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு திணறி வருகிறது. தினமும் காலை முதல் மாலை வரை கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு நெருக்கடியில் சிக்கி திணறுகிறது. பயணிகள் வாகனங்களை சாலை ஓரங்களில் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைத்தனர். அருவியின் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் பரந்து விரிந்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் திற்பரப்பு அருகில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அருவியின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், அங்கு நின்ற குலசேகரம் இன்ஸ்பெக்டரிடம் அருவியில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும், நுழைவு கட்டணம் வசூலிப்பவர்களுக்கும், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.