வேடசந்தூர் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த துணை ஆட்சியர் சிவக்குமார் உயிரிழந்தார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய சேராவூரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(46).
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சர்க்கரை ஆலையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வந்தார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, கொடைக்கானல் கோட்டாட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் தனது காரில், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இரவு மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிய நிலையில், வேடசந்தூர் அருகே அய்யர்மடம் என்ற இடத்தில் முன்னால் சென்ற டிராக்டரின் பின்புறம் இவரது கார் மோதியது.
இதில் சிவக்குமார் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். வேடசந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.