அதங்கோடு, எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (78). இவர் தனியாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் துளசிதரன் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், தக்கலை பகுதியில் வசிக்கும் அவரது மகள் அனுபாமா என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே புறப்பட்டு வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து உள்ளே பார்த்தார். அப்போது வீட்டில் உள்ளே துளசிதரன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டார். இது குறித்த தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் துளசிதரன் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வயது முதிர்வால் துளசிதரன் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.