குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மானிய விலை எண்ணெய் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருமனை வழியாக சொகுசு வாகனத்தில் ரேஷன் அரிசி கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் காரோடு என்ற பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு கைகாட்டியும் கார் நிற்காமல் சென்றுவிட்டது.
போலீசார் வாகனத்தை துரத்திச் சென்றனர். அந்த காரை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் காரில் சோதனை செய்தபோது, அதில் இரண்டரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேலும் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் ரேஷன் அரிசியை காருடன் அருமனை போலீஸ் நிலையத்தில் கொண்டுவந்து, பின்னர் உணவு பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.